சென்னை: உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர், தமிழகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம், இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை கற்றிருக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அண்மையில் விகாஷ் என்பவர் 'ஸொமேட்டோ' நிறுவனம் மூலம் சில உணவு வகைகளை வாங்கியுள்ளார்.
எனினும், தாம் கேட்டிருந்த குறிப்பிட்ட உணவு வந்து சேரவில்லை என்றும் இது தொடர்பாக உணவு வாங்கப்பட்ட உணவகத்தை தொடர்பு கொண்டு விசாரிக்குமாறும் 'ஸொமேட்டோ' ஊழியரை இணைய உரையாடல் மூலம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர், தாம் உணவகத்தை பலமுறை தொடர்புகொண்டு பேசியபோதும் தமக்கு மொழி தெரியாததால் சரியாக விவரம் தெரிவிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு, ஸொமேட்டோ நிறுவனம் தமிழகத்தில் சேவை அளிக்கிறது எனில், தமிழில் பேசக்கூடிய ஒருவரை வாடிக்கையாளர் சேவை பிரிவில் வைத்திருக்க வேண்டும் என்று விகாஷ் கூறியுள்ளார்.
ஸொமேட்டோ ஊழியரோ, இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும் எல்லோருக்கும் சிறிதளவேனும் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டார் விகாஷ். இதைக்கண்ட பலர் அத்தனியார் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
எனினும், பின்னர் அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி அந்த ஊழியரை பணியில் அமர்த்தி இருப்பதாகவும் நடந்த தவறுக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

