திருவனந்தபுரம்: கேரளாவில் நீடித்து வரும் கனமழையால் அம்மாநிலம் பெரும் சேதங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்குள்ள இடுக்கி அணை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
அந்த அணை முழுமையாக நிரம்பியதை அடுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் உள்ள பத்து முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவற்றின் கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எட்டு அணைகளுக்கு வெள்ள ஆபத்தைக் குறிக்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
மூன்று நாள்களுக்கு முன்பே இடுக்கி அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. இதையடுத்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வரும் 24ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

