பெங்களூரு: ஏரி, கால்வாய்களை ஆக்கிரமிக்கும் கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் இத்தகைய ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாக அவர் கூறினார்.
"ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் ஏரி, கால்வாய் நீர் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
"சில கட்டுமான நிறுவனங்கள் ஏரி, கால்வாயை ஆக்கிரமித்துள்ளன. அத்தகைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை.
பெங்களூரு மாநகராட்சி, மின்சார வினியோக நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட முதல்வர், பல இடங்களில் பொதுமக்களும் கூட ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.
"கால்வாய்களில் அதிகளவில் தூர் நிரம்பியுள்ளன. கால்வாய்களில் மழைநீர் தடையின்றி சென்று ஏரிகளை அடைந்தால் சிக்கல் இருக்காது. முதலில் தூர்வாரிய பின் கால்வாய்களை அகலப்படுத்த வேண்டும்," என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை.