புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் புத்தர் வீடுபேறு பெற்ற (ஞானம் பெற்ற) இடத்தைப் பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டுப் பயணிகளின் வசதிக்காக அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குஷிநகர் விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் 260 கோடி ரூபாய் செலவில் 3,600 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் 29வது அனைத்துலக விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
குஷி நகர் விமான நிலையத்தில், முதல் விமானமாக கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே மகனும், இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்சே தலைமையில் புத்த மதத் துறவிகள் வந்திறங்கி திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் பல ஆண்டு எதிர்பார்ப்புகள் நிறைவேறி உள்ளதாக கூறினார். வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் மேலும் புத்துணர்ச்சி அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விமான நிலையத்தை புத்த மதத்தவர்களுக்காக அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் சுற்றுலாத்துறை மேலும் மேம்படும் என்றும் அந்த மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட பகுதியான பூர்வாஞ்சல் பகுதியின் வளர்ச்சிக்கு இந்த புதிய விமான நிலையம் முக்கிய பங்காற்றும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் அவர், "இந்தியாவின் விமானப் போக்குவரத்தை தொழில்முறை திறனுடன் நடத்தவும், பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான பயணத்தை வழங்கவுமே ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் முடிவு எடுக்கப்பட்டது," என்று கூறினார்.
"இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்திற்கு இந்த முடிவு புதிய ஊக்கம் அளிக்கும். இந்தியாவில் 200 ஹெலிபோர்ட்கள் மற்றும் விமான நிலையங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
"சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக இந்தியா திகழ்கிறது. இந்த விமான நிலையம், தொழிலாளர் முதல் தொழிலதிபர் வரை அனைவருக்கும் பயனளிக்கும்," என்று பிரதமர் மோடி கூறினார்.