திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் பழங்கால கலைப்பொருருட்கள் விற்பனை செய்யும் அருங்காட்சியகம் நடத்தி வந்தார் மான்சோன் மாவுங்கல் என்பவர். அரசியல்வாதிகளிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் நன்கு அறிமுகமானவராக விளங்கி வந்தார்.
இந்நிலையில், கேரள தொழிலதிபர்கள் சிலர், மான்சோன், பழமையான பொருட்கள் என்று கூறி போலியானவற்றை தங்களிடம் விற்று ஏமாற்றியதாக அம்மாநில முதல்வர் பினராயிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலிஸ் அதிகாரிகள் மான்சோனை அண்மையில் கைது செய்தனர். அதன்பின்னர், அவர் மீது பலர் மோசடிப் புகார்களை அளிக்கத் தொடங்கினர். அதையடுத்து, அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், அவர் மீது புதிதாக ஒரு பாலியல் புகாரை தெரிவித்துள்ளார் 17 வயதுச் சிறுமி ஒருவர். இவர், மான்சோன் நடத்தும் அருங்காட்சியகத்தில் பணியாற்றிவரும் ஓர் ஊழியரின் மகளாவார். தனது கல்விச் செலவுக்கு உதவுவதாகக் கூறி, இரண்டு ஆண்டுகளாக மான்சோன், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக அச்சிறுமி புகாரில் கூறியுள்ளார்.
இந்தப் பாலியல் துன்புறுத்தல் புகாரையடுத்து மான்சோன் மாவுங்கல் மீது போக்சோ சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

