புதுடெல்லி: கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் சீன நாட்டுப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இந்திய ராணுவத்தின் கிழக்கு வட்டாரத் தளபதி மனோஜ் பாண்டே கவலை தெரிவித் துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில் 2020 மே மாதம், சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அதைத் தடுத்த இந்திய வீரர்களுடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
கிழக்கு லடாக் பகுதியைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் சீனப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இது கவலை அளிக்கிறது. நமது ராணுவத்திடம் சிறந்த கண்காணிப்பு ரேடார்கள், சிறந்த தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன.
மேலும் பாதுகாப்புத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிக அவசியம். எனவே தற்காப்பு அமைச்சு அதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
தற்போது எல்ஏசி பகுதியில் இரவுநேரங்களிலும் கண்காணிப்புப் பணிகளை தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக ஆளில்லாக் கண்காணிப்பு விமானம் பயன்படுத்தப்படும். இவ்வாறு தளபதி மனோஜ் பாண்டே கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.