லக்னோ: தம்மைக் கைது செய்ய வேண்டும் என்பதிலேயே உத்தரப் பிரதேச காவல்துறை முனைப்பாக உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
போலிஸ் காவலில் இருந்த துப்புரவுத் தொழிலாளி அருண் வால்மீகி என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற பிரியங்காவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
நெடுஞ்சாலையில் அவரது கார் நிறுத்தப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு அவரைக் கைது செய்வதாக போலிசார் தெரிவித்தனர்.
144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆக்ரா நகருக்குள் நுழைய அனுமதிக்க இயலாது என்றும் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, தாம் கட்சி அலுவலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்குச் செல்ல முயன்றாலும் காவல்துறை தடுத்து நிறுத்துவதாகச் சாடினார்.
"அரசு நிர்வாகம் என்னைத் தடுக்க முயற்சி செய்கிறது. இத்தகைய நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு நிறைய சிரமம் ஏற்படுகிறது" என்றார் பிரியங்கா.
மேலும், "நான் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றால் மாநில அரசு ஏன் பயப்படுகிறது? நான் ஏன் தடுக்கப்படுகிறேன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

