இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வீரர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்து பரபரப்பு நிலவுகிறது.
கடந்த சில தினங்களாக சீன ராணுவம் தனது வீரர்களை எல்லையில் குவித்து வருவதை அடுத்து, இந்தியாவும் அதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு பதிலடி கொடுத்துள்ளது.
'எஸ்-70' ரக ஏவுகணைகளை இந்திய ராணுவம் எல்லையில் குவித்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்திய வீரர்கள் ராணுவப் பயிற்சி மட்டுமல்லாமல், தியானம், யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறி ஊடுருவும் சீன ராணுவம், ஒப்பந்தங்களை மீறி சாலைகள், முகாம்களை அமைப்பதுடன் வீரர்களையும் பெருமளவில் குவித்து வருகிறது.
சீனாவின் இந்தப் போக்கு கவலை அளிப்பதாக இந்திய ராணுவத் தலைமைத் தளபதி கவலை தெரிவித்துள்ளார். எனினும், எத்தகைய சவாலையும் ஊடுருவலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, அருணாச்சலப் பிரதேச எல்லையில் கிழக்கு பகுதி ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
"எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் திறன் நம்மிடம் இருக்கிறது. சுற்றுக்காவல் பணியை மேற்கொள்வதில் அதிக மாற்றம் செய்யவில்லை. சில பகுதிகளில் அந்தப் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதியைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் சீனப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இது கவலையளிக்கிறது," என்றார் மனோஜ் பாண்டே.
இந்திய ராணுவத்திடம் சிறந்த கண்காணிப்பு ரேடார்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், சுற்றுக்காவல் பணியில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளும் பயன்படுத்தப்படும் என்றார்.