புதுடெல்லி: இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும் தேர்விலும் இந்தி மொழி முதன்மைப் பாடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளும் அயல்நாட்டு மொழிகளும் துணைப் பாடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பத்து, பனிரெண்டாம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், முதன்மை, துணைப் பாடங்கள் என பிரித்து தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இவ்வாறு அட்டவணை வெளியிடுவது இதுவே முதன்முறையாகும்.
அட்டவணையில் இந்தியும் ஆங்கிலமும் முதன்மைப் பாடங்களாக குறிப்பிட்டுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட மாநில மொழிகளும் அயல்நாட்டு மொழிகளும் துணைப் பாடங்களுக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் பாடத் திட்டத்திலும் தேர்விலும் இந்தியை மட்டும் மத்திய அரசு முன்னிலைப்படுத்தி உள்ளதாக மொழி, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான முடிவு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் இளையர்கள் தங்கள் தாய்மொழியைப் படிப்பதற்கான அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாகவும் தமது பதிவில் அவர் சாடி உள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மத்திய அரசு தொடர்ந்து மாநில மொழிகளை புறக்கணிப்பதாகவும் இதை ஏற்க இயலாது எனவும் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து மத்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.