தீவிர சிகிச்சைப் பிரிவில் பச்சிளம் குழந்தைகளும் அனுமதி
பெங்களூரு: மூச்சுப் பிரச்சினை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை பெங்களூரில் அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பில்லியன் தடுப்பூசிகளை போட்டு இந்தியா சாதனை படைத்துள்ள நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்களைத் தந்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் புதிய பிரச்சினை தலைதூக்கி உள்ளது. அங்கு திடீரென மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலர் மூச்சுக்குழல் அழற்சி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பெரியவர்கள் மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைகளுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அச் சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
பிறந்து இரு மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகளே ஆன குழந்தைகள் சிலருக்கு நெஞ்சுத்தொற்று, நிமோனியா, வேகமாக மூச்சுவிடுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இதனால் அக்குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் மூச்சுவிட சிரமப்பட்டால் சளி, இருமல் ஆகியவைதான் அதற்குக் காரணம் என்று நினைத்துவிடாமல் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் கொலம்பியா - ஆசியா மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சுப்ரஜா சந்திரசேகர்.
ஒரு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள், ஒரு நிமிடத்துக்கு 60 முறைக்கும் அதிகமாக மூச்சு விட்டாலோ, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை ஒரு நிமிடத்துக்கு 40 முறைக்கும் அதிகமாக மூச்சு விட்டாலோ, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்து ஒரு நிமிடத்துக்கு 30 முறைக்கும் மேல் மூச்சு விட்டாலோ, உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மூன்று நாள்களுக்கும் மேலான காய்ச்சல், தண்ணீர்கூட குடிக்க முடியாமல் வாந்தி எடுத்தால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்றும் கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் புதிதாக 15,786 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது. மேலும், 231 பேர் பலியாகிவிட்டனர். தற்போது 175, 745 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் தொற்றுப் பாதிப்பால் இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை. கேரளாவில் நேற்று முன்தினம் புதிதாக 8,733 பேருக்கு கிருமி தொற்றியதாகவும் 118 பேர் பலியாகி விட்டதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு 365 பேருக்கு கொரோனா தொற்றுப்பாதிப்பு இருப்பது உறுதியானது. இதேவேளையில் மகாராஷ்டிராவில் புதிதாக 1,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.