புதுடெல்லி: ராணுவத் தளவாட ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம்பெற்றுள்ளது என்றும் இது நாட்டின் பாதுகாப்புத் திறன் அதிகரித்துள்ளது என்பதற்கான சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆராய்ச்சி மையம் 2020ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள இந்த முன்னேற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இது பெருமைக்குரிய விஷயம் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
விமானப்படை பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிக்கு ரூ.35 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் 2024-25க்குள் இந்த இலக்கு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
வளர்ந்த நாடுகள் மட்டுமே ராணுவத் தளவாட ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த நிலையில், இந்தியாவும் அதில் சேர்ந்துள்ளது என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.