மும்பை: கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் இந்திய மக்களின் ஆயுட்காலம் ஏறக்குறைய ஈராண்டுகள் குறைந்திருக்கிறது. மக்கள்தொகை ஆய்வுக்கான அனைத்துலகக் கழகத்தைச் (ஐஐபிஎஸ்) சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய புள்ளிவிவர பகுப்பாய்வில் இது தெரியவந்துள்ளது.
"2019ல் ஆண்கள், பெண்களின் ஆயுட்காலம் முறையே 69.5 மற்றும் 72 ஆண்டுகளாக இருந்தன.
"2020ல் இது 67.5 மற்றும் 69.8 ஆண்டுகளாகக் குறைந்தது," என்று ஐஐபிஎஸ் உதவிப் பேராசிரியர் சூர்யகாந்த் யாதவ் கூறினார்.
ஒப்புநோக்க, அமெரிக்கா, இங்கி லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் ஆயுட்காலம் ஓராண்டுக்குமேல் குறைந்திருப்பதாகவும் ஸ்பெயினில் அது 2.28 ஆண்டுகள் குறைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய சுகாதார அமைச்சைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொவிட்-19 காரணமாக இந்தியாவில் ஏறக்குறைய 450,000 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கும் எனவும் புள்ளிவிவர நிபுணர்கள் கூறுகின்றனர்.
"ஆயுட்காலம் என வரும்போது, கடந்த பத்து ஆண்டுகளில் நாம் கண்டுள்ள முன்னேற்றத்தை கொவிட்-19 பாதிப்பு அழித்துவிட்டது. பழைய நிலையை நாம் மீண்டும் எட்ட பல ஆண்டுகள் தேவைப்படும்," என்றார் பேராசிரியர் யாதவ்.
இந்தியாவில் தற்போது மனிதவாழ்க்கையின் ஆயுட்காலம் 2010ல் இருந்த நிலைக்குச் சமமாக உள்ளது.
ஆயுட்காலத்தில் ஈராண்டுகள் குறைந்திருப்பது சிறிய விஷயம் அல்ல என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத நிபுணர் ஒருவர்.
இதற்கிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு புதிதாகப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், ஒரேநாளில் 666 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

