புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ஏறிவிட்டது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. அதேபோல் முதல் முறையாக டீசல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.
இதனால் வாகனமோட்டிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். சம்பாதிக்கும் காசு, பெட்ரோலுக்குக் கொடுக்கவே சரியாக இருக்கிறது என்று பலர் புலம்புகின்றனர்.
இந்த நிலையில் நாட்டில் உயர்ந்திருக்கும் பெட்ரோல், டீசல் விலைக்கு மத்திய அரசின் தவறான வரிக்கொள்கையே காரணம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், "ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ.100ஐ தாண்டி விற்பனையாகிறது. நடுத்தர மக்கள்கூட செலவு செய்ய முடியாது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலராகக்கூட இருந்துள்ளது. அரசின் தவறான வரிக்கொள்கையே இதற்கு காரணம்.
"வரி விதிப்பு என்பது ஒரு எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஒரே பொருளின் மீது 33% வரியை விதிப்பது தவறானது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் உலக வர்த்தகம் முடங்கியுள்ளது. மக்களிடம் கடன் சுமை அதிகரித்துள்ளது. தனிமனித சேமிப்பு குறைந்துள்ளது. இது அனைத்தும் நாட்டுக்கே விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணியாகும்," என்றார்.