157 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 16,000 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உருவாகும்
லக்னோ: ஏழைகளுக்கு அனைத்துவிதமான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுப்பதே மத்திய அரசின் நோக்கம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகளை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும், நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த, 'பிரதான் மந்திரி ஆத்ம நிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா' திட்டத்தை தொடங்கி வைத்த அவர், பொது சுகாதாரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்த திட்டம் உதவும் என்றார்.
மொத்தம் 64,180 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில் இத்திட்டத்துக்குரிய நிதி ஒதுக்கப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் 90 ஆயிரத்துக்கும் குறைவான மருத்துவ இடங்களே இருந்ததாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 60 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"உத்தரப் பிரதேசத்திலும்கூட 2017 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,900 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இரட்டை இஞ்சின் அரசால் மேலும் 1,900க்கும் அதிகமான இடங்கள் உருவாகி உள்ளன," என்றார் பிரதமர் மோடி.
முந்தைய அரசுகள் தேர்தல் களத்தில் வாக்குகளைக் கருத்தில் கொண்டு சில மருந்தகங்கள் அல்லது சிறிய மருத்துவமனைகள் பற்றிய அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு திருப்தி அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"நீண்ட காலமாக மருத்துவமனைகளின் கட்டடம் கட்டப்பட்டிருக்காது. மருத்துவக் கருவிகள் இருக்காது. இவை இரண்டுமே இருந்தாலும் மருத்துவர்களோ இதர ஊழியர்களோ இருக்கமாட்டார்கள். இப்படி குறைகள் இருந்தன.
"ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எனும் ஊழல் சக்கரம் ஓய்வில்லாமல் 24 மணிநேரமும் சுழன்றுகொண்டிருந்தது," என்றார் பிரதமர் மோடி.
தற்சார்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரத்திற்கான ஒரு தேசிய கல்விக்கழகம், நுண்கிருமி ஆய்வுக்கான நான்கு புதிய தேசிய கல்விக்கழகங்கள், உலக சுகாதார அமைப்புக்கான தென்கிழக்கு ஆசிய வட்டார மண்டல ஆராய்ச்சி அமைப்பு, உயிரி பாதுகாப்பு மூன்றாம் நிலையில் ஒன்பது பரிசோதனைக் கூடங்கள், நோய் கட்டுப்பாட்டுக்கான ஐந்து புதிய மண்டல தேசிய மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக 17,691 கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இக்கல்லூரிகள் செயல்படத் தொடங்கும்போது இளநிலை மருத்துவப் படிப்புக்கான 16 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அந்த அமைச்சு, ஏற்கெனவே 64 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கி உள்ளதால், 6,500 இடங்கள் முன்பே உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளது.

