புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் சீனா புதிய சட்டம் ஒன்றை இயற்றி உள்ளது. இதன் மூலம் அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
லடாக், அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதிகளில் இந்தியா, சீனா இடையே அண்மைக் காலமாகப் பதற்றம் நிலவி வருகிறது.
சீன ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். ஒருமுறை மோதல் தீவிரமடைந்து இருதரப்பும் தாக்கிக்கொண்டதில் உயிரிழப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், புதிய சட்டத்தை இயற்றி உள்ளது சீனா. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து புதிய சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் போர் அல்லது பெரிய அளவிலான மோதல் ஏற்பட்டால் நாட்டின் எல்லைகளை மூட புதிய சட்டம் வழிவகை செய்யும் என்றும் சீன அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசுத் தரப்பில் இருந்து எந்தவித கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.
காஷ்மீர் நிலவரம்:
இதற்கிடையே, காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நீடிக்கும் பட்சத்தில், அங்கு மீண்டும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என முப்படைத் தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக காஷ்மீரில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களையும் பொதுமக்களையும் பயங்கரவாதிகள் படுகொலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு பிரிவினரை பயங்கரவாதிகள் தாக்கி வருவதாகவும் இதன் மூலம் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் மறைமுக போரை நடத்துவதாகவும் பிபின் ராவத் சாடியுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளி மாநிலத்தவர்கள் வெளியேற்றப்படுவதை அனுமதிக்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்றார்.

