திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச நீரை திறந்து விட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீடித்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் மளமளவென அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டிவிடக் கூடாது என்பதற்காக தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் கேரள முதல்வர்.
அந்த அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என தமிழக அரசு கூறி வரும் நிலையில், கேரளா அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. அணையின் பாதுகாப்புக்கு இரு அரசுகளும் பொறுப்பேற்றுள்ளன.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பக்கம் விநாடிக்கு 1,750 கனஅடி தண்ணீரை திருப்பிவிட்ட பிறகும், அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போது 136.85 அடியாக உள்ள அணையின் நீர்மட்டம், மழை மேலும் தீவிரம் அடைந்தால், 142 அடியாக உயர்ந்துவிடும் என்று அஞ்சப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் தமிழ்நாட்டுக்கு கால்வாய் வழியாக படிப்படியாக தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய அவசர தேவை ஏற்படும். எனவே இப்பிரச்சினையில் தலையிட்டு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்குத் திறந்துவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்," என தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே கேரளாவில் தொடர் மழையால் சில பகுதிகளில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கோட்டயம், பட்டனம்திட்டா, திருச்சூர், இடுக்கி உள்ள மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

