மும்பை: ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் வழக்கு தொடர்பில் அவரது தந்தையும் நடிகருமான ஷாருக்கானிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி, அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகிய இருவரும் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகர், இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிகாரிகள் தம்மிடம் பத்து வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், ஷாருக்கானைத் தொடர்புகொண்டு 25 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியதாகவும் பிரபாகர் செயில் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார் என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரைண அமைப்பின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் நோக்கத்துடன் பிரபாகர் குற்றம்சாட்டி இருப்பதாகவும் கூறியுள்ளது.
இதற்கிடையே, தேசபக்தி என்ற பெயரில் பொய் வழக்குகள் போடப்பட்டு சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியான ஷாம் டிசூசோ, மிகப்பெரிய அளவில் பண மோசடியில் ஈடுபடும் நபர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆர்யன் கான் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்ட பிரபாகர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஷாருக்கானிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக கூறியுள்ள நிலையில், சிவசேனாவும் குற்றம்சாட்டி உள்ளது.