தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து விசாரணை நடத்த இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் உரையாடல்களை இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாக கூறப்படுவது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மூவர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க அமர்வு உத்தரவிட்டது.
“இந்தியாவின் ரகசியத்தைக் காப்பது முக்கியம். தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகள் முக்கியம்,” என்று தீர்ப்பின்போது நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
சிறப்பு நிபுணர் குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ‘ரா’ பிரிவின் முன்னாள் இயக்குநர் அலோக் ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஒபராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.