ஜம்மு/காஷ்மீர்: சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் வகையில் காஷ்மீர் ஏரியில் ஏற்கெனவே படகு வீடுகள் உள்ளன. இந்தப் படகு வீடுகளில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க சுற்றுலாப் பயணிகள் அங்கு விரும்பிச் செல்வர். புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகமான பொழுதுபோக்கு இடங்களை உருவாக்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வகையில் மிதக்கும் திறந்தவெளித் திரையரங்கு ஒன்று அங்கு கட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்குமுன் திறக்கப்பட்ட அந்தத் திரையரங்கத்தை ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலர் அருண் குமார் மேத்தாஅண்மையில் தொடங்கிவைத்தார்.
திரையரங்கம் தொடங்கப்பட்ட முதல் நாளன்று 'காஷ்மீர் கி காளி' என்கிற இந்தி மொழிப் படம் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என்றும், இங்கு சுற்றுலா மேம்படும் என்றும் ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை செயலர் சர்மத் ஹபீஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "மாலை நேரங்களில் கூடுதலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதன் விளைவால் உருவானதே இந்த மிதக்கும் திரையரங்கத் திட்டம் ஆகும்.
உலகில் வேறு எங்கும் இதுபோன்ற மிதக்கும் திறந்தவெளி திரையரங்கத்தைக் காணமுடியாது. இது காஷ்மீர் சுற்றுலாவை மேலும் பிரபலப்படுத்தி அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்," என்றார்.

