புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் இங்கிலாந்து சென்றால் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
இந்தியாவின் சீரம் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்பர்ட் ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கொவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரிட்டன் அண்மையில் ஒப்புதல் அளித்தது.
சில நாட்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனமும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எலிஸ், "இங்கிலாந்து செல்லும் இந்தியர்களுக்கு சிறந்த செய்தி, வரும் 22ஆம் தேதியிலிருந்து கோவேக்சின் உள்ளிட்ட உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகள் போட்டு கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை," என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.