அமித்ஷா: மத்திய, மாநில அரசுகள் கூட்டாக போராடியதால் ஏற்பட்ட பலன்
புதுடெல்லி: கொவிட்-19 பிடியில் இருந்து இந்தியா ஏறக்குறைய விடுபட்டுவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மத்திய-மாநில அரசுகள் கூட்டாக போராடியதே இதற்கான காரணம் என்று ஆளுநர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
புதுடெல்லியில் அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை நடந்த 51வது ஆளுநர்கள் மாநாட்டில் உரை யாற்றிய அமைச்சர், கொரோனா வுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையில், மாநிலங்களுடன் இணைந்து, 'ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மனம்|' என்ற சிந்தனையுடன் போராடி மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது என்றார்.
மாநில முதல்வர்களுடன் பிரதமர் 20 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதாகவும் இந்தியா எப்படி போராடியது என்பதை பார்த்து உலகமே பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் 110 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு அந்த பலத்துடன் கொரோனா பிடியில் இருந்து நாடு ஏறத்தாழ விடுபட்டுவிட்டதாக அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.
இதனிடையே, வீடு வீடாகச் சென்று கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போடும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தும்படி மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களை வலியுறுத்தினார்.
இதற்காகவே 'ஒவ்வொரு வீட்டையும் தத்தெடுங்கள்' ஒரு என்ற திட்டத்தை இந்தியா தொடங்கி இருக்கிறது.
இந்தியாவில் இன்னமும் 12 கோடி பேர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாமலேயே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இது கவலை அளிக்கிறது என்றார்.
நாடு முழுவதும் 110 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது என்றாலும் இதில் மெத்தனம் கூடாது என்று மாநில சுகாதார அமைச்சர்களிடம் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,516 பேருக்குத் தொற்று ஏற்பட்டதாகவும் 501 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். கொவிட்-19 காரணமாக மொத்தம் 462,690 பேர் மாண்டுவிட்டதாக தகவல்கள் கூறின.

