லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி (படம்) தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அந்த மாநிலத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதாக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.
ஆட்சியைத் தக்க வைக்க பாஜக பல்வேறு யோசனைகளை அமைத்துள்ளது. இதற்காக அங்கு பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து தொடங்கி வைத்து வருகிறார்.
காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் முகாமிட்டு தீவிர களப்பணியாற்றி வருகிறார். இந்த முறை ஆட்சியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் நாள்தோறும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
பிரியங்காவின் வாக்குறுதிகள் உத்தரப் பிரதேச மக்களை வெகுவாகக் கவர்ந்து வருவதாக சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதை வாக்காக மாற்றும் பணிக்காக அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையொட்டி அவர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க இருப்பதாக உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி நேற்றும் இன்றும் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துச் பேசும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக் கப்பட்டிருந்தது.
ஆக்ரா, அலிகார், மீரட் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை நேற்று அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.
அதன் பின்னர் புலந்தசரில் பிரியங்கா பேசுவதற்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இன்று (நவம்பர் 15) அவர் மொரதாபாத், சகரன்பூர், பரேலி உள்பட 12 மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளார்.
இந்த இரு நாள் கலந்துரையாடலில் கட்சியைப் பலப்படுத்துவது, வீதிவீதியாகச் சென்று மக்களைச் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி பிரியங்கா விவாதிப்பார் என மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு கூறினார்.
உத்தரப் பிரதேச மாநில ஆட்சியைக் கைப்பற்ற தீவிர களப்பணி

