புதுடெல்லி: எனது கேள்விக்குச் சரியான பதில் சொன்னால் பத்மஸ்ரீ விருதைத் திருப்பித் தந்துவிடுகிறேன் என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது அரசியல் ரீதியாக சர்ச்சை ஆனது. "1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது," என அவர் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்றும் தேச துரோக வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்குப் பதிலடியாக கங்கனா ரணாவத் நேற்று பேசினார். "எனக்குத் தெரிந்தவரை 1947ஆம் ஆண்டு எந்தப் போரும் நடக்கவில்லை. நடந்திருந்தால் அதுபற்றி யாராவது எனக்குச் சொல்லட்டும். வெள்ளையர்கள் நாட்டை ஏன் பிரித்தனர்? 1947ல் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்குப் பதில் மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக்கொண்டது ஏன்?
"எனது கேள்விக்கான பதில்களை யாராவது சொல்லட்டும். அதன்பின் 1947ல் பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு, எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்," என அவர் கூறியுள்ளார்.

