திருப்பதி: இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் 17 பேர் இறந்துவிட்டனர்; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டோரைக் காணவில்லை.
கோவில் நகரமான திருப்பதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிக்கிக்கொண்டதைப் படங்கள் காட்டின. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதையும் நடைபாதையும் மூடப்பட்டுள்ளன.
அந்நகரின் புறத்தே அமைந்துள்ள சுவர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; நீர்த்தேக்கங்கள் நிரம்பி, நீர் வழிந்து ஓடுகிறது.
அனந்தபூர் மாவட்டம், கதிரி நகரில் கனமழை காரணமாக நேற்றுப் பின்னிரவு மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகளும் மூதாட்டி ஒருவரும் மாண்டுபோயினர். இடிபாடுகளில் குறைந்தது நால்வர் சிக்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
சித்ராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பத்துப் பேர், இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டனர்.
மூன்று அரசுப் பேருந்துகள் நீரில் மூழ்கிவிட்டன. அவற்றில் சிக்கியிருந்த 12 பேரை மீட்க இயலவில்லை..
தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள் முழுமூச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ராயலசீமா வட்டாரமே ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சித்தூர், கடப்பா, கர்னூல், அனந்தபூர் மாவட்டங்கள் நீரில் மிதக்கின்றன.
கடப்பா விமான நிலையம் இம்மாதம் 25ஆம் தேதிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.