தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கடும் மழை, வெள்ளம்
சென்னை: தென் இந்திய மாநிலங்களில் அண்மையில் பெய்த கனத்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 30 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகிறது.
ஒரு சம்பவத்தில் மூன்று பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில் சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் மூன்று அரசுப் பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன.
இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருப்பதி, நெல்லூரில் மேலும் ஐந்து பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காணவில்லை.
தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக ஆந்திரா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இது ஆந்திராவில் நிலை கொண்டதால், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சித்தூரில் ஏராளமான ஆடு, மாடுகள் மக்களின் கண்முன்னே நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கல்யாணி அணை நிரம்பியதால், 2 மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் சுவர்ணமுகி நதியில் திருப்பதியில் இருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கார்கள், இரு சக்கர வாகனங்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அனந்தபூர் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் சிக்கியதால் அதில் தவித்த 4 பேரை காப்பாற்ற 6 பேர் சென்றனர். பிறகு அவர்களும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு பத்து பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் கனத்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரதமர் மோடியிடம் தொலைபேசி வழியாகப் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கினார். அப்போது, ஆந்திராவுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

