அமராவதி: ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி கண்ணீர்விட்டுள்ள நிலையில் இப்போதுதான் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இம்மாநில சட்டமன்றத்தில் வேளாண் துறை தொடர்பான விவாதம் நடைபெற்றபோது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரசாரமான விவாதத்திற்குப் பிறகு தெலுங்கு தேச கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சட்டசபையிலிருந்து வெளியேறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் பேசிய சந்திரபாபு நாயுடு, "கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டசபையில் பல அவமானங்களைத் தாங்கிக்கொண்டேன். ஆனால் இப்போது என் மனைவி புவனேஸ்வரி மீது கடுமையான, இழிவான வார்த்தை களைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் தாக்குதலுக்குப் பதில் அளிக்க நான் முயற்சி செய்தபோது 'மைக்' நிறுத்தப்பட்டது. இனி நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முதல்வராக மட்டுமே சட்டசபைக்குள் நுழை வேன்," என்று சூளுரைத்தார்.
இந்த நிலையில் சந்திரபாபு கண்ணீர்விட்டது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் "இதுதான் விதி, உங்களை சும்மாவிடாது. என்னை சட்ட சபையில் இதைவிட மோசமாக நீங்கள் நடத்தினீர்கள். இப்போது உங்களுக்கு அதே விஷயம் நடக்கும்போது கண்ணீர் விடுகிறீர்கள். தங்கள் மனைவி குறித்து பேசிவிட்டதற்காக கண்கலங்கும் நீங்கள், அதிகாரத்தில் இருந்தபோது ரோஜா, 'ப்ளூ' பிலிமில் நடிக்கிறார் என சட்டசபையில் சொன்னீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா? பிள்ளைகள் இல்லையா? அன்று 72 வயதில் என்.டி.ஆரை நீங்கள் கலங்கச் செய்தீர்கள். இன்று 71 வயதிலேயே அதை நீங்களும் அனு பவிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளீர்கள்.
"அதனால்தான் 'நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்பும்' என்று சொல்வார்கள். எனக்கு இப்போதுதான் 'ஹாப்பி'யாக இருக்கிறது. உங்களது போலியான நீலிக்கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள்.
"எனக்குத் தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்ட சபைக்குத் திரும்ப வாய்ப்பில்லை. அதற்கு காரணம் நீங்கள் செய்த சபதம்தான், Bye.. Bye… பாபு," என்று ரோஜா ஆவேசத்துடன் பேசியுள்ளார்.