புதுடெல்லி: நாட்டில் 80 விழுக்காடு மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடுவதே முதல் இலக்கு என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தொற்று நோய்ப் பிரிவின் தலைவர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போதைக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகள் போட வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். எனினும் மத்திய அரசு இதுகுறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சமிரன் பாண்டா, பூஸ்டர் ஊசி போடுவது தொடர்பாக நாடு முழுவதிலும் இருந்து பெறப்படும் அறிவியல்பூர்வமான மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்றார்.
தற்போது கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான அவசியம் இப்போது எழவில்லை என்றும் தெரிவித்தார்.