பொதுவாக, தங்க நகைகள் போன்ற விலைமதிப்புள்ள பொருள்களைத் தொலைத்துவிட்டால், அவை திரும்பக் கிடைக்கும் என்று ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்.
ஆனால், தவறவிட்ட நகைகள் திரும்பக் கிடைத்ததால் இந்தியாவின் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் பெருமகிழ்ச்சி அடைந்தது.
காஷ்மீரில் பாகல்கம் என்னும் இடத்தில் கண்டெடுத்த நகைகளை ரஃபீக், அஃப்ரோஸ் எனும் இரு குதிரைக்காரர்கள், 70 கிலோமீட்டர்க்கும் அதிகமான தொலைவு பயணம் செய்து, ஸ்ரீநகருக்கு வந்து நகைகளை ஒப்படைத்தனர்.
“தாகிர், பிலால் எனும் எங்களது இரு காரோட்டிகளும் பெரிதும் முயன்று, அவ்விரு குதிரைக்காரர்களின் கைபேசி எண்களைப் பெற்றனர். அவர்களை அழைத்து தகவல் சொன்னபின், அவ்விருவரும் பாகல்கம்மில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்து நகைகளைத் திருப்பித் தந்தனர்,” என்றார் நகைகளைத் தவறவிட்ட சுற்றுப்பயணி.
நேரில் வந்து நகைகளை ஒப்படைத்து, நேர்மையுடன் நடந்துகொண்ட ரஃபீக்கிற்கும் அஃப்ரோசுக்கும் அவரும் அவர்தம் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.