புதுடெல்லி: பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு (படம்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவரது வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' என்ற பயங்கரவாத அமைப்பு இந்த மிரட்டலை விடுத்துள்ளது.
கிழக்கு டெல்லி தொகுதி எம்பியான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவரது தரப்பு காவல்துறையில் புகார் அளித்தது. இதையடுத்து அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகப் போலிசார் தெரிவித்தனர்.
அந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக டெல்லி போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 'ஐஎஸ்ஐஎஸ்' அமைப்பு சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' என்ற புதுப்பெயரில் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காஷ்மீரில் அந்தப் பெயரில் புதிய பயங்கரவாத அமைப்பு செயல்படத் துவங்கியுள்ளதா என்று உளவுத்துறை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.