விலங்குகளின் வித்தியாசமான செயல்கள் ஒருபோதும் இணையவாசிகளைக் கவரத் தவறுவதில்லை.
அவ்வகையில், எருமை ஒன்று தனது கொம்பால் அடிகுழாயை இயக்கி, நீர் அருந்தி, தாகம் தீர்த்துக்கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
அந்த அடிகுழாயைச் சுற்றி எருமைக் கூட்டம் நின்றிருப்பதை அக்காணொளி காட்டுகிறது. அவற்றில் ஒரு எருமை, தனது கொம்பால் அடிகுழாயின் நெம்புகோலை மேலும் கீழும் உயர்த்த, குழாய் வழியாக நீர் கொட்டுகிறது.
பின்னர், தரையில் நீர் கொட்டும் இடத்தில் இருக்கும் சிறுகுழியில் தேங்கி இருக்கும் நீரை அவ்விலங்கு பருகுகிறது.
ஐபிஎஸ் அதிகாரி தீபான்சு காப்ரா அந்தக் காணொளியைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். கிட்டத்தட்ட 215,000 பேர் அதனைக் கண்டுள்ளனர்.
எருமையின் அறிவுக்கூர்மையைக் கண்டு பலரும் வியந்துபோயினர்.