இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட ஆடவர் ஒருவர், ஏழு மணிநேரம் சவக்கிடங்கில் இருந்த பிறகு, உயிருடன் கண்டறியப்பட்ட சம்பவம், மருத்துவர்களைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது.
ஸ்ரீகேஷ் குமார் எனும் அந்த 40 வயது ஆடவர் உயிருடன் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், தலையில் ஏற்பட்ட உள்காயம் காரணமாக கோமாவுக்குச் சென்றார்.
தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை. அவருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.
சிகிச்சை பலனின்றி குமார் பின்னர் உயிரிழந்துவிட்டதாக அவரின் சகோதரர் சத்யானந்த் கௌதம், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் தெரிவித்தார். சவக்கிடங்கில் உயிருடன் கண்டறியப்பட்ட குமார், ஐந்து நாள்கள் கழித்து உயிரிழந்தார்.
முன்னதாக, குமார் இறந்துவிட்டதாக உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் உள்ள அரசாங்க மருத்துவர் ஒருவர் தவறுதலாகக் கூறியிருந்தார்.

