இந்தியாவில் வறுமை குறைந்த மாநிலம் கேரளா, அதிகமான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மாநிலம் பீகார். இந்தியாவின் நிதி ஆயோக்கின் 'வறுமை குறியீடு' அறிக்கை இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக இந்தியாவின் ஆய்வுக் கழகமான, நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது. பீகாரில் 51.91% மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். ஜார்கண்ட்டில் 42.16% உத்தரப்பிரதேசத்தில் 37.19% மத்திய பிரதேசத்தில் 36.65% மேகாலயாவில் 32.67% வறுமையில் உள்ளனர். இந்த மாநிலங்களில் மாநில பொருளாதார வளர்ச்சியும் வருவாயும் மிகமிகக் குறைவாக உள்ளன. அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. தாய்மார்களின் ஆரோக்கியம் பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பிகார் மோசமான இடத்தை பிடித்துள்ளது. கேரளா, கோவா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் வறுமை கோட்டுக்குகீழ் வாழ்பவர்கள் 6 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர். கேரளா 0.71%, கோவா 3.76%, சிக்கிம் 3.82%, தமிழகம் 4.89% பஞ்சாபில் 5.59% மக்கள் வறுமையில் உள்ளனர். யூனியன் பிரதேசங்கள் பொறுத்த வரையில், தத்ரா, நாகர் ஹவேலியில் 27.36 விழுக்காட்டினரும், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் 12.58 விழுக்காட்டினரும், டாமர் & டியூவில் 6.82 விழுக்காட்டினரும், சண்டிகரில் 5.97 விழுக்காட்டினரும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். புதுச்சேரியில் 1.72%, லட்சத்தீவில் 1.82%, அந்தமான், நிக்கோபார் தீவில் 4.30%, டில்லியில் 4.79% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் முறையை தற்போது இந்திய நிதி ஆயோக் அமைப்பு பின்பற்றி இந்த விவரங்களை திரட்டி உள்ளது. ஒரு மாநிலத்தின் சுகாதாரத்துறை வளர்ச்சி, கல்வித் துறை மேம்பாடு, மக்களின் வாழ்வாதாரம், மக்களின் ஊட்டச்சத்து, சிறுவர் மற்றும் பதின் பருவத்தினர் இறப்பு விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
வறுமை குறைந்த மாநிலம் கேரளா
2 mins read
-

