சபரிமலையில் தினமும் 45,000 பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை: சபரிமலையில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூசை நடந்து வருகிறது. இணையம் மூலம் முன்
பதிவு செய்த 30,000 பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சபரிமலையில் தரிசனம் செய்ய இணைய முன்பதிவு அடிப்படையில் இனி தினமும் 40,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் உடனடி முன்பதிவு மூலமாக ஒவ்வொரு நாளும் 5,000 பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்," என்றார்.
கல்லூரியில் 182 பேருக்கு தொற்று
பெங்களூரு: கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சில பேராசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி ஆனது. அண்மையில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை வரவேற்க நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றவர்கள் அவர்கள். எனவே விழாவுக்குச் சென்ற மற்றவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டதில் நேற்று வரை 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ரூ.100 கோடி ஹெராயின் கடத்தல்
ஜம்மு: ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் போலிசார் ஈடுபட்டிருந்தபோது ஒரு சரக்கு லாரியை மடக்கினர். அதில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய 52 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, ஓட்டுநர் கைது செய்யப் பட்டார். பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருள் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நோக்குடன் அனுப்பி வைக்கப்பட்டதாக போலிசார் கூறினர்.

