புதுடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசை, இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இந்த வழக்கில் பாகிஸ்தான் அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் மூத்த அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு அவர் நேரில் வரவழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சு, கொடூரமான முறையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் தரப்பு அக்கறையின்றிச் செயல்படுவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
"தனது கட்டுப்பாட்டில் உள்ள மண்ணை, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என பாகிஸ்தான் வாக்குறுதி அளித்துள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும்.
"குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் மூத்த தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது," என மத்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி மும்பையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கு பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
அதற்குத் தேவையான பல்வேறு ஆதாரங்கள் இந்திய தரப்பில் இருந்து அளிக்கப்பட்டது. எனினும், வழக்கு மெத்தனப் போக்கில் கையாளப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.