பெங்களூரு: நடப்பு நவம்பர் மாதத்தில் மட்டும் தென்மாநிலங்களில் 1,172 பேர் மழைக்கு பலியாகிவிட்டது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தென்மாநிலங்களில் டிசம்பர் 2ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மாநிலங்களில் தமிழகத்தில்தான் ஆக அதிகமாக 68 பேரை மழை பலி கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கேரளாவில் 48 பேரும் ஆந்திராவில் 44 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
கர்நாடகாவில் மரண எண்ணிக்கை 12ஆக உள்ளது.
இம்மாநிலங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை.
தற்போது வங்காள விரிகுடா கடற்பகுதியில் புதிதாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. கடந்த 1ஆம் தேதியில் இருந்து இதுவரை நான்கு தாழ்வுப் பகுதிகள் உருவாகி உள்ளன.
இதே காலகட்டத்தில் தென்மாநிலங்களில் 143.4% அளவு கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகாவிலும் கேரளாவிலும் வழக்கத்தைவிட 110 விழுக்காடு கூடுதல் மழை பெய்துள்ளது. வழக்கமாக தமிழகத்தில் இக்காலகட்டத்தில் குறைவான மழையே பதிவாகும். ஆனால், இம்முறை அங்கும் 70% கூடுதல் மழை பெய்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள மலைப்பாதை வெகுவாக சேதமடைந்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூரிலும் தெற்கு கர்நாடகாவிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 1,169 வீடுகள் மழையால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. 5,434 வீடுகளின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19ஆம் தேதி வரை அங்கு நீடித்த கனமழையால், நான்கு மாவட்டங்களில் உள்ள 1,990 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கேரளாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.