புதுடெல்லி: மத்திய அரசு நான்கு விவேக நகரங்களை உருவாக்கி வருவதாக மத்திய தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் இவை அமைக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ரூ.16,750 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியது.
தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்தப் புதிய நிறுவனங்களுக்கான கட்டமைப்பில் தென்கொரியாவின் ஹியோசங், ரஷ்யாவின் என்எல்எம்கே, சீனாவின் ஹாயர், டாடா கெமிக்கல்ஸ், அமுல் ஆகிய நிறுவனங்கள் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளன.
இந்த நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக 754 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் அமைச்சு கூறியுள்ளது. மேலும், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்தப் புதிய விவேக நகரங்கள் அமைய உள்ளன.
இதற்கிடையே நாட்டின் வேறு பகுதிகளில் பெரும் செலவிலான 23 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழில் வழித்தடங்களில் செயல்பட்டு வரும் அத்திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. இதை மத்திய தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.