புதுடெல்லி: ஏர்செல், மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்று, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேட்டில் அப்போதைய மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் தொடர்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மத்திய அமலாக்கத்துறையும் சிபிஐயும் இப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளன. இதையடுத்து இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
இவ்வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவை குறித்து சிபிஐ விசாரித்து வருவதாகவும் மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் தெரிவித்துள்ளார்.