புதுடெல்லி: நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இயற்கையை நாம் பாதுகாக்கும்போது அதற்குப் பிரதிபலனாக இயற்கை மனிதர்களைப் பாதுகாக்கும் என்று 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தூத்துக்குடியில் உள்ள சிறிய தீவுகள், திட்டுகள் கடலில் மூழ்காமல் இருக்க அம்மக்கள் பனைமரங்களை நடுவதாகத் தெரிவித்தார்.
"புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று அம்மரங்கள் நிலத்தைப் பாதுகாக்கின்றன. இயற்கையைப் பாதுகாப்பதால் விளையும் நன்மையை தமிழக மக்கள் உணர்த்தி உள்ளனர். இது போன்ற பகுதிகள் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது," என்று பிரதமர் மோடி பாராட்டினார்.
உத்தரப் பிரதேசத்தின் ஜலான் என்ற இடத்தில் நூன் என்று அழைக்கப்படும் ஆறு இருந்ததாகவும் படிப்படியாக அது அழிவின் விளிம்புக்குச் சென்றது என்றும் குறிப்பட்ட பிரதமர் மோடி, அப்பகுதி விவசாயிகளுக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜலான் பகுதி மக்கள் இந்த ஆண்டு குழு ஒன்றை அமைத்து அந்த நதிக்குப் புத்துயிர் அளித்ததாகப் பாராட்டினார்.