புதுடெல்லி: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்புக்கம்பியைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திரிபுராவில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள ஷெவ்ரதாலி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் தேப்ராய் என்ற ஆடவர், நேற்று முன்தினம் திடீரென தன் வீட்டில் இருந்த தனது இரண்டு மகள்கள், தம்பியை இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில், மூவரும் படுகாயம் அடைந்து, அங்கேயே உயிரிழந்தனர். பின்னர் தன் மனைவியையும் கடுமையாகத் தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் பிரதீப்.
சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி, அதன் ஓட்டுநரையும் அவரது மகனையும் தாக்கினார். இதில் ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் பலியானார். ஓட்டுநரின் மகனும் பிரதீப்பின் மனைவியும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிசார், விரைந்து சென்று பிரதீப்பை கைது செய்ய முயன்றனர். அப்போது காவல்துறை ஆய்வாளரையும் அவர் விடவில்லை. பிரதீப் தாக்கியதில் ஆய்வாளரும் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில், பிரதீப் கைதாகி உள்ளார்.