புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே மக்களவையில் அமளி நிலவியது. எனினும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதும், மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். சில உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதையடுத்து அவை நடவடிக்கைகளை 12 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்.
அவை மீண்டும் கூடியதும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள், அவையில் இருந்து வெளியேறி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி, வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றும் செயல் என பாஜக கூறியுள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் தேவையின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி சாடியது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக் கும் பதில் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் நடப்புத் தொடர் செயல்பாடு மிக்க தொடராக அமையவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.