கோல்கத்தா: இறுதிச்சடங்குக்காக சடலத்தைக் கொண்டு சென்ற லாரி, மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகிவிட்டனர். இந்தச் சம்பவம் மேற்குவங்க மாநிலம், நடியா மாவட்டத்தில் நிகழ்ந்தது.
நேற்று முன்தினம் சக்டா பகுதியைச் சேர்ந்த முதியவர் காலமானார். இதையடுத்து இறுதிச் சடங்குக்காக அவரது உடலை சிறியரக லாரியில் வைத்து இடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது உறவினர்கள், நண்பர்கள் என 35 பேர் அந்த லாரியில் ஏறிக்கொண்டனர்.
அதிகாலை சுமார் மூன்று மணியளவில் மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர், சாலையோரம் நின்றிருந்த மற்றொரு லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் சிறியரக லாரியில் இருந்த 12 பேர் அந்த இடத்திலேயே பலியாகினர். மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.
இறந்தவர்களில் ஆறு பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவர். அதிகாலை வேளையில் அதிக பனிமூட்டம் நிலவியது விபத்துக்கான காரணமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.