திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுப் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவை இப்போது நோரோ கிருமியும் சோதித்து வருகிறது. அங்கு அண்மைய சில தினங்களாக நோரோ தொற்றுப் பாதிப்பும் அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கொரோனா, ஜிகா, நிபா, நோரோ என்று மனிதர்களை அச்சுறுத்தும் அனைத்து வகை கிருமிகளும் கேரளாவில்தான் முதலில் கண்டறியப்படுகின்றன.
தற்போது இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் அன்றாடம் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் சரிபாதி கேரளாவின் பங்களிப்பாகவே உள்ளது. இந்நிலையில் நோரோ தொற்றுப் பாதிப்பும் அம்மாநில அரசுக்கு கவலை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி தங்கும் விடுதியில் உள்ள 54 மாணவிகளும் மூன்று ஊழியர்களும் நோரோ கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசுத்தமான குடிநீர் காரணமாக இந்தத் தொற்று பரவியதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 8ஆம் தேதியே தொற்று அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அம்மாணவிகளில் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் எட்டு பேர் மட்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தபோதுதான் சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.