'ஓமிக்ரான்': வெளிநாட்டு விமானங்களுக்குத் தடை கோரும் தலைவர்கள்
புதுடெல்லி: 'ஓமிக்ரான்' தொற்றுப் பாதிப்பு காரணமாக, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் இருக்க மாநில அரசுகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கு முன் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை படிப்பினையாகக் கொண்டு, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உருமாறிய கொரோனா வகையான 'ஓமிக்ரான்' உலகெங்கிலும் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. இதுகுறித்து மாநில அரசுகளுடன் நேற்று விரிவான ஆலோசனை மேற்கொண்டது மத்திய அரசு.
அப்போது, மாநிலங்களில் 'ஓமிக்ரான்' தொற்றுப் பரவலை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் ராஜேஷ் பூஷன் விரிவாக விவரித்தார்.
எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலன் தரும் என்று விளக்கம் அளித்த அவர், ஒவ்வொரு மாநிலத்திலும் இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே உத்தரப் பிரதேசத்துக்கு வந்துள்ள நான்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 'ஓமிக்ரான்' பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது. நாட்டில் இதுவரை யாருக்கும் அந்தப் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சர் மாண்டவ்யா மன்சுக் நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
ஓமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ள நிலையில், இந்திய அரசு மட்டும் ஏன் தாமதிக்கிறது என்று டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல வெளிநாட்டு விமானங்கள் டெல்லியில் தரையிறங்குவதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், இதனால் பாதிப்புகள் ஏற்படும் முன்பே அந்த விமானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கெனவே மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயும் இதே கோரிக்கையை கடந்த வார இறுதியில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
'ஓமிக்ரான்' அச்சத்துக்கு மத்தியில் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை தீவிர மடைந்துள்ளது. டெல்லியில் பேருந்து நிலையம் அருகே சுகாதாரத் துறை ஊழியர், இளையர் ஒருவரின் மாதிரியை சேகரிக்கிறார்.
படம்: ராய்ட்டர்ஸ்

