புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என மாநிலங்களவைத் தலை வர் வெங்கைய நாயுடு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
நேற்று நாடாளுமன்றம் கூடியது. 12 எம்பிக்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது நடந்த சம்பவத்தை வைத்து இப்போது நடவடிக்கை எடுக்கப்படுவதை ஏற்க இயலாது என்று அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, முந்தைய அந்தக் கசப்பான அனுபவம் இன்னும் பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கிறது என்றும் இடை நீக்க நடவடிக்கையை திரும்பப் பெற இயலாது என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

