புதுடெல்லி: கொவிட்-19 தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமான நிலையங்களில் தரையிறங்கியவுடன் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். ஆனால், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்காக நீண்ட வரிசையைத் தவிர்க்க கூடுதல் கட்டணம் செலுத்துவது ஒரு வழி.
விரைவு ஆர்டிபிசிஆர் பரிசோதனை, வழக்கமான ஆர்டிபிசிஆர் பரிசோதனை என இரு வகை பரிசோதனைகள் உள்ளன.
விரைவு ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகளை ஒரு மணி நேரத்திலேயே தெரிந்துகொள்ளலாம். மாறாக, வழக்கமான ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வெளிவர குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் ஆகும்.
ஆனால், பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிந்துகொள்ள கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விரைவு ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.3,900. வழக்கமான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.500. நான்கு பேர் கொண்ட குடும்பமாகப் பயணம் செய்வோர் விரைவு பரிசோதனைக்கு ரூ.15,600 அல்லது வழக்கமான பரிசோதனைக்கு ரூ.2,000 செலுத்த வேண்டும்.
ஆனால், ஒவ்வொரு விமான நிலையத்திலும் இக்கட்டணம் மாறு படக்கூடும். ரூ.900ஆக இருந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணத்தை டிசம்பர் 1 முதல் ரூ.700ஆகக் குறைத்துள்ளதாக சென்னை விமான நிலையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
தொற்று அபாயமுள்ள நாட்டில் இருந்து இந்தியா வருபவர், விமான நிலையத்தில் பரிசோதனை முடிந்தவுடன் ஓரிரு வாரத்திற்கு இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.