சென்னை: சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் அனைவரும் இந்தியில் மட்டுமே பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் ஆங்கிலத்தில் பேசுமாறு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று முன்தினம் அந்த அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக எம்பி வைகோ பங்கேற்றார்.
கூட்டம் தொடங்கியது முதல் அமைச்சர், அமைச்சு அதிகாரிகள், எம்பிக்கள் என அனைவரும் இந்தியில் மட்டுமே பேசியதாகத் தெரிகிறது. அப்போது குறுக்கிட்ட வைகோ, தமக்கு இந்தி மொழி தெரியாத நிலையில் மற்றவர்கள் பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வது எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய அமைச்சர், வழக்கமாக வரக்கூடிய மொழி பெயர்ப்பாளர் பணிக்கு வரவில்லை என்று கூறியதுடன், அனைவரும் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் அனைவரும் ஆங்கிலத்தில் பேசினர். பின்னர் வைகோ நன்றி தெரிவித்தார்.

