அகமதாபாத்: சாலையோரமாகத் தள்ளுவண்டிகளில் அசைவ உணவு விற்பனை செய்த 25 பேரின் வண்டிகளை அகமதாபாத் மாநகராட்சி பறிமுதல் செய்தது. அதை எதிர்த்து, அந்த வணிகர்கள் அனைவரும் ஒன்றாக குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இவ்விவகாரத்தில் மாநகராட்சியின் நடவடிக்கையை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.
"இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு அசைவ உணவு பிடிக்கவில்லை எனில், அது உங்களது கண்ணோட்டம். வீட்டிற்கு வெளியே நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய நீங்கள் யார்? மாநகராட்சி ஆணையர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? குறிப்பிட்டவர்கள்மீது பாகுபாடு காட்ட உங்களுக்கு என்ன துணிச்சல்?" என்று சரமாரியாகச் சாடினார் நீதிபதி பிரேன் வைஷ்ணவ்.
கரும்புச்சாறு குடித்தால் நீரிழிவு வரும் அல்லது காப்பி குடிப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று நாளை சொல்வீர்களா என்றும் அவர் கேட்டார். அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்காக இப்படி திடீர் திடீரென நடவடிக்கை எடுப்பதையும் அவர் குறைகூறினார்.
முன்னதாக, தள்ளுவண்டிகளில் அசைவ உணவு விற்பது சமய உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று ராஜ்கோட் நகர மேயர் கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.
வழக்கின் இரண்டாவது அமர்வில் மாநகராட்சி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், அசைவ உணவு விற்றதற்காக அந்த வணிகர்களின் தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் போக்குவரத்திற்கும் நடையர்களுக்கும் இடையூறாக இருந்ததால்தான் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் சொன்னார்.
ஆனால், அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, "நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். வஸ்த்ராபூர் ஏரியைச் சுற்றி பலரும் முட்டையும் ஆம்லெட்டும் விற்கின்றனர். ஆட்சியில் இருக்கும் கட்சி 'முட்டை விற்கக்கூடாது' என்று கூறினால், ஒரே இரவில் அந்தக் கடைக்காரர்களை எல்லாம் அப்புறப்படுத்திவிடுவீர்களா?" என்று காட்டமாகக் கேட்டார்.
மனுதாரர்களான வணிகர்கள் அணுகும் பட்சத்தில், 24 மணி நேரத்திற்குள் அவர்களது பொருள்களையும் வண்டிகளையும் ஒப்படைத்துவிட வேண்டும் என்று மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, வணிகர்களின் மனுவையும் அவர் தள்ளுபடி செய்தார்.

