டெல்லி புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள் ஆடிப் பாடிக் கொண்டாட்டம்
புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதையடுத்து, போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் சுமார் ஓராண்டு காலத்துக்குப் பிறகு சொந்த ஊர் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள் நேற்று வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஊர் திரும்ப மறுத்து, டெல்லி புறநகர்ப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை மறித்து, தற்காலிக கூடாரங்கள் அமைத்து, அங்கேயே தங்கிவிட்டனர்.
சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய மூன்று இடங்களும் கடந்த பல மாதங்களாக அகதிகளுக்கான முகாம்களைப் போல் காட்சி அளித்தன. இந்நிலையில், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதால், விவசாயிகளும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
நேற்று காலை முதல் தாங்கள் அமைத்த கூடாரங்களைப் பிரித்தெடுத்து, இதுநாள் வரை பயன்படுத்திய பொருள்களுடன் டிராக்டரில் ஏறி அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கினர்.
போராட்டக் களத்தில் உள்ள அனைவரும் கிளம்பிச் செல்ல நான்கைந்து நாள்கள் ஆகும் என விவசாய சங்கப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, தங்கள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, விவசாயிகள் பலர் ஆடி பாடி மகிழ்ந்தனர்.
சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய மூன்று இடங்களும் விவசாயிகளின் இந்தக் கொண்டாட்டத்தால் களைகட்டின. காலை 8.30 மணிக்கு திரண்ட விவசாயிகள் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நடனமாடினர். பின்னர் தேச பக்திப் பாடல்களைப் பாடினர்.
இதையடுத்து பஞ்சாப் மாநில விவசாயிகள் டிராக்டர்களில் நீண்ட அணிவகுப்பு பேரணியைப் போன்று புறப்பட்டுச் சென்றனர். திக்ரி பகுதியில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் விவசாயிகளுக்கு வாழ்த்துகூறி வழியனுப்பி வைத்தார்.
டெல்லி புறநகர் பகுதிகளில் இருந்து விவசாயிகள் புறப்படுவதால் 380 நாள்களுக்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலைகளில் இயல்புநிலை திரும்பத் தொடங்கி உள்ளது.

