புதுடெல்லி: ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்கள், ஊகங்களை பரப்பக்கூடாது என்று இந்திய விமானப்படை வலியுறுத்தி உள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இறந்த முப்படைத் தலைமை தளபதியின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும் என்றும் விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர், கடைசி நொடிகளில் அதை காணொளியாகப் பதிவு செய்த இருவரும் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயார் என கூறி உள்ளனர்.
கோவையைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஜோ பால், அவருடைய நண்பர் நாசர் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கும் முன் அதைப் படம் பிடித்துள்ளனர்.
இதேபோல் அப்பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கைபேசியில் ஹெலிகாப்டரைப் படம் எடுத்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பால், குன்னூருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது, காட்டேரி பகுதியில், ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாகப் பறப்பதைக் கண்டு அதை காணொளியாகப் பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.
இந்தக் காணொளி தொடர்பாக சிலர் தங்களை தவறாக விமர்சிப்பது வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், காவல் ஆணையரிடம் உரிய விளக்கங்களை அளித்துள்ளதாகத் தெரிவித்தார். விபத்து குறித்த விசாரணைக்கு இந்தக் காணொளிப் பதிவு உதவும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்து ராணுவத் துப்பாக்கிகள் பல மீட்கப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

