இந்தியாவில் இது திருமணக் காலம்.
எந்நாளும் மறக்க முடியாதபடி, நினைவில் வைத்திருக்கும் வகையில் தங்களது திருமணம் புதுமையான முறையில் நடைபெற வேண்டும் என்று மணமக்கள் விரும்புகின்றனர்.
தேர், சுழல்மேடை, ஊஞ்சல் என, பிரம்மாண்டமான முறையில் மணமக்கள் திருமண அரங்கிற்குள் நுழையும் வகையில், கருப்பொருளுடன் கூடிய திருமணங்களைக் காண முடிகிறது.
அப்படி ஒரு பிரம்மாண்டமான திருமண விழாவில், மேடையில் நடன மங்கையரும் வாணங்களில் இருந்து பறந்து மின்னிய தீப்பொறிகளும் வரவேற்பு அளிக்க, கைகோத்தபடி மணமக்கள் இருவரும் ஊஞ்சலில் தோன்றினர். ஆனால், மகிழ்ச்சியாக அமைய வேண்டிய அந்நிகழ்வு, சற்று நேரத்தில் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துவிட்டது.
மெல்ல மெல்ல உயரே சென்ற ஊஞ்சல் திடீரென அறுந்துவிழ, கிட்டத்தட்ட 12 அடி உயரத்தில் இருந்து மணமக்கள் கீழே விழுந்தனர். நல்ல வேளையாக, அவர்கள் பெரிதாகக் காயம் அடையவில்லை.
அதன்பின் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் திருமணச் சடங்குகள் தொடர்ந்தன.
சட்டீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இவ்விபத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு (event management) நிறுவனம் முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்டது.